இஸ்ரேல் தாக்கியதில் ஈரானில் 40 மாணவிகள் உயிரிழப்பு!..
அணுசக்தி தொடர்பாக ஈரானிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் போர்தொடுத்திருக்கிறது. வான் வெளி தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது. அந்த நகரம் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கிறது.. ஈரான் அதிபர் மாளிகையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.....
ஈரானை தாக்கி அழிப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டிருக்கிறார். ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை தகர்த்து அவர்களின் கடற்படையை அழிப்போம் என அவர் கூறியிருக்கிறார்.. மேலும் ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ள டிரம்ப், ஈரானியர்களுக்கு சுதந்திரம் நெருங்கி விட்டதாகவும் பேசியிருக்கிறார்..
இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கும் ஈரான் போலீசுக்கும் நான் சொல்வது இதுதான்.. இன்று இரவுக்குள் உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் நீங்கள் மரியாதையாக நடத்தப்படுவீர்கள்.. இல்லையென்றால் உறுதியாக மரணம் அடைவீர்கள் என அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளியில் படித்துவந்த 40 மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், பல மாணவிகள் காயமடைந்துள்ளனர்.