வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (16:02 IST)

விஸ்வரூபம் எடுக்கும் மன்கட் பிரச்சனை – ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா ?

நேற்றையப் போட்டியில் அஸ்வின் மன்கட்  முறையில் அவுட் செய்யப்பட்டதை அடுத்து அந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று நடைபெற்ற 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதையடுத்து அஸ்வின் தான் செய்தது ஒன்றும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதல்ல என விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் அதை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வதாயில்லை. அஸ்வின் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை மதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றனர். பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா விளக்கமளித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் ‘ இந்த மன்கட் முறை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் அணிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது தோனி மற்றும் கோஹ்லி உள்ளிட்ட சில கேப்டன்கள் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கூட்டத்தின் முடிவில் இந்த முறையைப் பயன்படுத்தக்கூடாது என தார்மீக முடிவு எடுக்கப்பட்டது. ’ எனக் கூறியுள்ளார். இதனால் இப்போது ஐபிஎல்-ல் இருந்து மன்கட் முறை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.