வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (16:32 IST)

அஸ்வின் செய்தது சரிதான்… மன்கட்டிங் சர்ச்சையில் ரிக்கி பாண்டிங் ஆதரவு!

மன்கட்டிங் முறை வேண்டாம் என அஸ்வினிடம் பேசுவேன் எனக் கூறிய ரிக்கி பாண்டிங் இப்போது அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் அஸ்வின். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் இது குறித்து நான் அஸ்வினிடம் விவாதிக்க உள்ளேன். அவரிடம் முதல் விஷயமாக இதைதான் பேசப்போகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை அஸ்வின் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இப்போது ரிக்கி பாண்டிங் அஸ்வினுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதுகுறித்து ‘மன்கட்டிங் முறை குறித்து நான் திறந்த மனதுடன் அஸ்வினிடம் விவாதித்தேன். அவர் கிரிக்கெட் விதிமுறைகளின் படியே அந்த அவுட்டை செய்ததாக சொன்னார். அவருடைய வாதம் ஏற்றுக்கொள்ள கூடியதுதான்’ எனக் கூறியுள்ளார்.