வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (08:20 IST)

கமல், ரஜினி முயற்சித்ததை தான் செய்துள்ளதுள்ளோம்: பிரசாந்த் கிஷோர் குறித்து திமுக விளக்கம்

பிரசாந்த் கிஷோர் குறித்து திமுக
வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் இணைந்து உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி எஸ்.கே.பி கருணா அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மத்தியில் ஆளும் பாஜக தனது முழு சக்தியையும் ப்ரயோகித்து தன் பங்குக்கு சில பல முயற்சிகளை மேற்கொள்ளும். இடையா சாதி, மதக் கணக்குகள் வேறு., வேட்பாளர் தேர்வு மிக, மிக முக்கியமான காரணியாக இருக்கும். இந்தச் சூழலில் சென்ற முறை நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட திமுக, எந்தவொரு சிறிய ஓட்டைகளையும் விடாமல் தேர்தல் யுத்தியை அமைக்க வேண்டியிருக்கிறது. 100 எம்.எல்.ஏக்களை வைத்திருந்து என்ன பயன்? மாநில சட்டமன்றத்தில் நீட், சி.ஏ.ஏ எதிர்ப்புத் தீர்மானத்தை கூட கொண்டு வர முடியாத நிலைதானே உள்ளது. இந்த இழிநிலை மாற வேண்டுமானால் தனித்த மெஜாரிட்டியை பெற்றே தீர வேண்டும். அதற்கு திமுகவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த, கூட்டணிக் கணக்குகளை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து பரிந்துரைக்க (சென்றமுறை கோட்டைவிட்ட இடம் இதுதானே!), வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காண உதவ, எல்லாவற்றுக்கும் மேலாக விர்ச்சுவல் உலகமான சோஷியல் மீடியாவில் கட்சியின் தடத்தை தெளிவாகப் பதிக்க, அநியாயத்துக்கு ஏவப்படும் அவதூறுகளை சமாளிக்க ஒரு தொழில்முறை ஆலோசனை தேவைப்படுகிறது.
 
இது இந்தக் கால அரசியல் சூழலுக்கு, வெற்றிக்குத் தேவை. இப்படியான ஆலோசனையால்தான் காங்கிரஸை வீழ்த்தி மோடியால் பிரதமராக முடிந்தது. பஞ்சாபில் காங்கிரஸ், பீஹாரில் நிதிஷ், ஆந்திராவில் ஜகன்மோகன் என பலரும் பணம் கொடுத்துப் பெற்ற இந்தத் தொழில்முறை தேர்தல் பிரச்சார ஆலோசனையும் வெற்றிக்கு உதவியது. அதே வழித்தடத்தில், திமுக தலைவரும் அதே நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளார். இப்படி ஆலோசனைக்கு அமர்த்தப்பட்ட ஐபேக் நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோரை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி & ஓபிஎஸ் அழைத்துப் பேசினர்.
 
 
கமல்ஹாசன் அழைத்துப் பேசினார். ரஜினிகாந்த் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக பாஜகவும் முயன்றது., இறுதியாக அந்த நிறுவனம் திமுகவுக்காக பணிபுரிய (வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாலோ!) முன்வந்து பணியாணையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் இத்தனை பரபரப்பும், கேள்விகளும், நையாண்டிகளும் எழுவதைக் காண வியப்பாக உள்ளது. இதில் அதிமுகவை தவிர நையாண்டி செய்யும் பிற கட்சிகள் இப்படியான தொழில்முறை ஆலோசனை பெற்றவைதான்.
 
“மாற்றம், முன்னேற்றம், அன்புமணி” நினைவிருக்கா? அதுகூட ஒரு நிறுவனம் வடிவமைத்துத் தந்த யுத்திதான். இந்த முறை அதிமுக கூட வேறு தகுதியுள்ள நிறுவனத்தை பணியமர்த்த பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். திமுகவின் முடிவு மட்டும் ஏன் இத்தனை விமர்சனத்துக்குள்ளாகிறது என்பது வியப்பு. ஒரு கட்சியின் கொள்கை சார் முடிவுகளை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் யார் எந்தப் பணிகளை செய்ய வேண்டும் என்பதை அக்கட்சியின் தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும். அது முழுக்க முழுக்க அந்தக் கட்சியின் உள்விவகாரம் அல்லவா? ஒருவேளை இந்த ஐபேக் நிறுவன நியமனத்தால் கட்சியின் கொள்கையில் தடுமாற்றம் இருந்தால் விமர்சியுங்கள்.
 
ஆனால், நியமனத்தையே கேள்விக்குள்ளாக்குவது நியாயமல்ல. ஒரு திமுககாரனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே வாழ்வா? சாவா? வகையிலான தேர்தல் என கருதுகிறேன். இந்தமுறை(யும்) வாய்ப்பைத் தவற விட்டால் அதன் விளைவுகள் தமிழ்ச் சமூக, மொழி, பண்பாட்டுக்கே அபாயம் என நான் நம்புகிறேன். அதன் பொருட்டு எனது தலைவர் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன். பிரஷாந்த் கிஷோர் பல மாநிலங்களில், குறிப்பாக பல கட்சிகள்,பல கூட்டணிகள் கொண்ட மாநிலங்களில் மிகச் சரியான கூட்டணியை உருவாக்கி, அசாத்திய வெற்றிகளை சாத்தியமாக்க உதவியுள்ளர். அவருடைய ஆலோசனைகளும் இப்போது தேவையானதுதான்’
 
இவ்வாறு திமுக நிர்வாகி எஸ்.கே.பி. கருணா தெரிவித்துள்ளார்.