1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vairamuthu fullstop to aandal controversy

ஆண்டாள் விவகாரம் ; புண்படுத்துவது என் நோக்கமல்ல : வைரமுத்து விளக்கம்

Vairamuthu
ஆண்டாள் குறித்து நான் பேசிய கருத்துகள் யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

 
தினமனி நாளிதழ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
எனவே, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா “இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வாடிக்கை. இதற்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. 
 
ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஈயத்தை பார்த்து பித்தளை இளிச்சிதாம்: நிர்மலா சீதாராமனை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!