$200 மில்லியன் அவுட்சோர்ஸிங் பணியை $50 மில்லியனாக குறைத்த கூகுள்.. HCL நிறுவனத்திற்கு நஷ்டமா?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம், HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்துடனான தனது அவுட்சோர்சிங் ஒப்பந்தத்தின் மதிப்பை ஆண்டுக்கு 50 மில்லியன் டாலர் அளவுக்கு குறைத்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளின் பயன்பாட்டு மேம்பாட்டு பணிகளை கவனித்து வந்த இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு முன்பு சுமார் 200 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவினால் HCL டெக் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் மிகக் குறைவான தாக்கமே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஒப்பந்தக் குறைப்பால் பணியாளர் நீக்கம் எதுவும் செய்யப்படவில்லை. மாறாக, கூகுள் திட்டத்தில் பணியாற்றி வந்த சுமார் 1,000 ஊழியர்கள் மற்ற புதிய திட்டங்களுக்கு மாற்றப்பட உள்ளனர்.
உலகளாவிய நிறுவனங்கள் செலவுகளை குறைக்க ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்தி வருவதே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இது இந்தியாவின் ஐடி துறைக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் நிறுவனங்கள் வெறும் ஆள் பலத்தை நம்பியிராமல், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் உயர்தர சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
Edited by Siva
