சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (10:09 IST)

அத்தையுடன் அத்துமீறிய உறவு.. உல்லாசத்தில் இருந்தபோது நடந்த கொடூரம்! – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

கிருஷ்ணகிரியில் நாத்தனார் மகனுடன் கள்ளக்காதலில் இருந்த பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டுக்கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான பழனி. கூலித்தொழிலாளியான இவருக்கு சத்யா (36) என்ற மனைவியும், 18 வயது, 16 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களோடு குண்டாங்காட்டை சேர்ந்த பழனியின் அக்காள் மகன் மாரியப்பன் (25) வசித்து வந்துள்ளார். அந்த ஊரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு பழனி வீட்டில் தங்கியிருந்த மாரியப்பனுக்கு தனது அத்தை சத்யாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவருக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது சத்யாவின் கணவர் பழனிக்கும், அவரது மகன்களுக்கும் தெரிய வந்த நிலையில் அவர்களது முறைதவறிய உறவு குறித்து அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை விடாமல் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று பழனி மற்றும் அவரது மகன்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் சத்யாவும், மாரியப்பனும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். திடிரென அந்த வீட்டில் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தபோது சத்யா கட்டிலில் கழுத்தறுபட்டு இறந்து கிடந்துள்ளார். அருகே மாரியப்பன் கழுத்தில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீஸார் மாரியப்பனை மருத்துவமனையில் அனுமதித்ததோடு, சத்யாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K