யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், சட்டவிரோதமாக கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவரது மருமகனும் யூடியூப் வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில், நோயாளி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த முனிஷ்ரா ராவத், டிசம்பர் 5 அன்று 'ஸ்ரீ தாமோதர் ஔஷதாலயா' என்ற கிளினிக்கிற்கு சென்றார். அங்கு, கிளினிக் நடத்துனர் கியான் பிரகாஷ் மிஸ்ரா, அறுவை சிகிச்சைக்காக ரூ.25,000 செலவாகும் என்று கூறி, ரூ.20,000 முன்பணம் பெற்றார்.
அறுவை சிகிச்சையின்போது மிஸ்ரா மது போதையில் இருந்ததாகவும், யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு சிகிச்சையை தொடங்கியதாகவும் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். மிஸ்ரா ஆழமான கீறலை ஏற்படுத்தி, ரத்த நாளங்களை வெட்டியதால், முனிஷ்ரா அடுத்த நாள் உயிரிழந்தார். அவருக்கு உதவிய மருமகன் விவேக் குமார் மிஸ்ரா அரசு மருத்துவமனை ஊழியர் ஆவார்.
சட்டவிரோதக் கிளினிக் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Edited by Siva