வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (07:14 IST)

சிறுவன் சுஜித்துக்கு கோவில்: தாயார் வேண்டுகோள்

தன் மகனுக்காக ஒரு கோயில் கட்டி வழிபட உள்ளதாக சுஜித்தின் தாய் கலாமேரி கூறியுள்ளார்.
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஊர்ப்பொதுமக்களும் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடுக்காட்டுப்பட்டி சென்று சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து சுஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி குறித்த அறிவிப்பும் செய்தார். முதல்வருடன்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
 
இந்த நிலையில் குழந்தையை இழந்து தவித்து வரும் சுஜித்தின் பெற்றோர்கள் கூறியபோது, ‘எங்களால் முடிந்த வரை முயற்சி செய்தோம். உலகத்தில் உள்ள எல்லா சாதனங்களையும் பயன்படுத்தினோம். ஆனால் என் மகன் உயிரை மீட்க முடியவில்லை. இந்த விஷயம் என் மகனோடு முடியட்டும். வேறு யாருக்கும் இதுபோல் நடக்க கூடாது. இதுவே கடைசியாக இருக்கட்டும்’ என்று கூறினார்.
 
மேலும் மறைந்த என் மகனுக்காக கோயில் கட்ட வேண்டும் என்பதே என் ஆசை என்றும் அதனை விரைவில் நிறைவேற்றுவேன் என்று கூறினார். சுஜித்தின் தந்தை ஆரோக்கியதாஸ் கூறியபோது, ‘என் மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு முயன்றவரை முயற்சி செய்தது. என் மகனை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி’ என்று கூறினார்