1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. student protest buses not stopped in college stop

நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. 400க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சாலை மறியல்..!

கல்லூரி
அருப்புக்கோட்டை அருகில் உள்ள கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதை அடுத்து அந்த கல்லூரியில் படிக்கும் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி என்ற பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் அங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்துகளில் வரும் நிலையில் காலை மாலை ஆகிய இரு நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகளை ஏற்றாமல் அரசு பேருந்து நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசு பேருந்துகள் நிற்காமல் சென்றதை அடுத்து கொதித்து எழுந்த மாணவர்கள் திடீரென இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் செய்தனர். இதனை அடுத்து தகவல் அறிந்த டிஎஸ்பி காயத்ரி சம்பவ இடத்திற்கு வந்து மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு பேருந்துகள் நிற்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரிக்குச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva
 
 
அடுத்த கட்டுரையில்
நாளை 13 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!