வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (08:42 IST)

தேர்தல் தினத்தில் வீடுகளில் கருப்புக்கொடி: ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் மக்கள் முடிவு!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஸ்ரீரங்கம் அருள்மிகு  ரங்கநாதசுவாமி கோவிலை சுற்றியுள்ள சுமார் 329 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கள் நிலத்தின் பட்டா இருந்தாலும் அந்த நிலத்தை விற்பனை செய்யவோ அல்லது தங்களுடையது என்று உறுதிபடுத்திக்கொள்ளவோ முடியாது. இதுகுறித்த வழக்கு ஒன்று கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த நிலங்களை அதில் குடியிருப்பவர்களுக்கே உரிமை என்று தமிழக அரசு எழுதி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் தினத்தன்று 10 ஆயிரம் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவிருப்பதாக அருள்மிகு  ரங்கநாதசுவாமி கோவில் குடியிருப்போர் நல சங்கம் அரங்கம் நகர் நல சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வெங்கடாச்சலம்  வெளிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், 
 
தேர்தல் நேரத்தில் இந்த பகுதி மக்கள் எடுத்துள்ள அதிரடி அறிவிப்பால் அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் வாக்குகள் யாருக்கும் விழாமல் போக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது