எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை.. சபாநாயகர் பிரபாகர் ..
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு, போஸ்டர்களை காட்டிய விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். முதல்வரின் பதிலுரையை தடுக்க முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், அந்த சூழலையும் மீறி முதல்வர் தனது உரையை முழுமையாக நிறைவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
முதல்வர் எப்போது பதில் அளிப்பார் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அதன்படி பதிலுரை நாளான திங்கட்கிழமை முதல்வர் பேசுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சியினர் பேசும்போது அமைச்சர்கள் பதிலளிக்கவும், அதற்கு எதிர்க்கட்சியினர் மீண்டும் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். அதேபோல், முதல்வர் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமைதியாக இருந்து அவரது உரையை கேட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அனுமதியின்றி போஸ்டர்களை காண்பிப்பதும், தொடர்ந்து கூச்சலிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என சபாநாயகர் கண்டித்தார். முதல்வரின் பேச்சு மக்களிடம் முழுமையாக சென்றுவிடக்கூடாது என்பதே இதன் நோக்கம் என்றால், அதை தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் பேசத் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று தொடர்ந்து முழக்கமிட்டதாகவும், நீண்ட நேரம் போராட்டம் நடத்தியும் அவரது உரையை நிறுத்த முடியவில்லை என்றும் சபாநாயகர் கூறினார். இறுதியில் முதல்வர் தனது பதிலுரையை முழுமையாக முடித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியங்கள் தொடர்பான விவாதத்தில் போஸ்டர்களை காட்டுவது விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல என்றும், அவையின் ஒழுங்கை காப்பது அனைவரின் பொறுப்பு என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வலியுறுத்தினார்.
Edited by Siva
