1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (08:47 IST)

இன்று முதல் புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!

இன்று முதல் புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடக்கம்
இன்று முதல் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணியை தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் வழங்கும் பணியை தொடங்க உள்ளதாகவும் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4 ஆயிரம் இரு தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. ஜூன் மாதத்தில் நிவாரணத்தொகையுடன் 14 மளிகைப்பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது. இதனைப்பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத்தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.
 
புதிய மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்டு கார்டு) கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகைப்பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக வினியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் 1-ந்தேதி (இன்று) முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது