1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (10:35 IST)

தினகரன் - திவாகரன் மோதலுக்கு இதுதான் காரணமா?

குடும்ப பிரச்சனை காரணமாகவே திவாகரன்-தினகரன் இடையே மோதல் உருவாகியுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே, தினகரனுக்கு எதிராக பல கருத்துகளை திவாகரன் வெளிப்படையாக பேசி வருகிறார். 
 
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது என்றெல்லாம் திவாகரன் கூறினார். மேலும், அம்மா அணி என தனியாக ஒரு அணியை உருவாக்கியுள்ளார். அதோடு, இதுவரை தினகரன் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஜெயானந்த், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார்.

 
இதற்கு பின்னால் ஒரு குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சசிகலா குடும்பத்தினரை பொறுத்தவரை, சொந்த நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே பெண் எடுத்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். தினகரன் கூட சொந்த தாய் மாமா மகளான அனுராதாவையே திருமணம் செய்து கொண்டார். தினகரனுக்கு திவாகரன் தாய் மாமா. அதாவது, தினகரனின் தாயாரின் சகோதரர்தான் திவாகரன். 
 
எனவே, தனது மகன் ஜெயனாந்த்திற்கு தினகரனின் பெண்ணை திருமணம் செய்து வைக்க திவாகரன் முடிவு செய்தாராம். எனவே, இதுபற்றி நேரில் பேச சென்னை வந்த திவாகரன், தினகரனிடன் பேசியுள்ளார். ஆனால், அதற்கு தினகரன் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இப்போது என்ன அவசரம்? பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறினாராம். திவாகரன் எவ்வளவு கேட்டும் தினகரன் பிடி கொடுக்காமல் நழுவி விட்டாராம்.

 
ஏற்கனவே, கட்சியில் ஜெயானந்திற்கு பதவி கேட்டார் திவாகரன். தினகரன் கொடுக்கவில்லை. ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தில் பொறுப்புகளை கேட்டார். அதையும் தினகரன் தட்டிக் கழித்தார். தற்போது தன்னுடைய மகனுக்கு பெண்ணும் கொடுக்க மறுக்கிறார் என்கிற கோபமே தற்போது திவாகரனும், அவரது மகன் ஜெயானந்தும் தினகரனுக்கு எதிராக பேச வைத்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
 
ஜெயானந்துக்கு பெண் கொடுத்தால், அதை வைத்து திவாகரனும், ஜெயானந்தும் தன்னிடம் அரசியல் டீல் பேசுவார்கள் என்பதாலேயே அவர்களை ஒதுக்கி வைக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக மன்னார்குடி வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.