1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police warned to social network users

சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிட்டால்.. காவல்துறை முக்கிய எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள்
சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் அதிகமாகி வருவதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
நவீன அரசியல் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள்/பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடுகின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
 
இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு வித்திடுகின்றன. காவல் துறையை பொருத்தவரை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, ஜாதி, மதம் சார்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கையை காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரை மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படும் சூழ்நிலை அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
அமீர்கான் - கிரன்ராவ் உறவு போல் நாங்கள் இருக்கின்றோம்: பாஜக-சிவசேனா உறவு குறித்து மூத்த தலைவர்!