1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (07:22 IST)

மிக்ஜாம் புயல் பாதிப்பு… குடும்பங்களுக்கு தலா 10000 ரூ நிவாரண நிதி வழங்கவேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்!

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் சென்னை தன்னுடைய இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது.  புயல் கரையைக் கடந்து 2 நாட்களுக்கு மேலானாலும் இன்னமும் சென்னையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. வடசென்னை பகுதிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் இன்னமும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. மிக்ஜாம் புயல்குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

மூன்று நாட்களாகிவிட்ட நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. உண்மையாகவே நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலான பணியாளர்கள், ஐஏஎஸ்அதிகாரிகளை அனுப்ப வேண்டும்.

மழை - வெள்ளத்தால் சென்னைமற்றும் புறநகர் மாவட்டங்களில் அனைத்து குடும்பங்களும் பொருளாதார இழப்பையும், வாழ்வாதார இழப்பையும் சந்தித்துள்ளன. சென்னை மாநகர மக்களின் துயரங்களை ஓரளவாவது போக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.10,000 நிதி உதவி வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.