1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PMK Ramadoss hope CM Stalin will ban gambling apps

ஆன்லைன் சூதாட்டத்தை முதல்வர் நிச்சயம் தடை செய்வார்! – ராமதாஸ் நம்பிக்கை!

ramadoss
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்துள்ளதாகவும், விரைவில் தடை செய்யப்படும் என நம்புவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என நீண்ட காலமாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுவை திமுக அரசு ஏற்படுத்தியது.

இந்த குழு வல்லுனர்களிடம் பரிந்துரை பெறுதல், மக்கள் கருத்துகளை கேட்டறிதல் ஆகியவற்றை மேற்கொண்டு இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், எடுக்கப்படும் என்று நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் விஷயத்தில் வல்லுனர் குழு அமைந்து பரிந்துரை பெறுதல், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு, சூதாட்ட நிறுவனங்களுடன் கலந்தாய்வு என தேவைக்கும் அதிகமாகவே தமிழ்நாடு அரசு முன்தேவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது!

அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆன்லைன் சூதாட்டத் தடையாகத் தான் இருக்க வேண்டும். எனவே, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு உடனே முடிவுரை எழுதப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
’பாரத மாதாவுக்கு ஜே’- வா? பாஜகவை சாடிய சீமான்!