1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (06:53 IST)

டக்-அவுட் ஆகுமா பாமக? 7 தொகுதிகளிலும் திமுக போட்டி!

பாட்டாளி மக்கள் கட்சி முதலில் திமுகவுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தியது. அக்கட்சிக்கு திமுக 7 தொகுதிகள் வரை தர ஒப்புக்கொண்ட நிலையில் ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதி அதிகம் தருவதாக அதிமுக கூறியதும் திடீரென அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, பாமகவுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தது
 
ஆரம்பத்தில் இருந்தே பாமக போட்டியிடும் தொகுதிகளை மோப்பம் பிடித்த திமுக, அந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தராமல் தனது கைவசமே வைத்து கொண்டது. இந்த நிலையில் பாமக போட்டியிடும் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் விழுப்புரம் தவிர ஏனைய ஆறு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டாலும், அக்கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார் என்பதால் பாமகவின் ஏழு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடுகின்றது என்பதுதான் அர்த்தம்
 
இந்த ஏழு தொகுதியின் நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடித்து டக்-அவுட் ஆக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் அன்புமணி மட்டுமே பாமகவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தேர்தலின் முடிவு அக்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்