1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (11:11 IST)

பொருளாளர் பதவியிலிருந்து நீக்கமா? அரக்கபரக்க சென்னை கிளம்பிய ஓபிஎஸ்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தரப்பில் ஆலோசனை நடைபெறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டார். 
 
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
 
இதையடுத்து டெல்லி சென்று வந்த ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்தார். நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார்.இந்நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்றும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்றும் அறிவித்தார். 
 
இதன் பின்னர் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக பொருளாளர் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சுகள் எழுந்தது. முன்னதாக அதிமுகவின் நமது அம்மா நாளேட்டின் நிறுவனர்கள் பெயரில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டது. இதனால் இன்றைய அதிமுக கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இம்மாதிரியான தகவல் வெளியானதும் தனது சொந்த ஊரில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டார். மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.