1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Murugan devoties not allowed for vote in Sulur

முருகபக்தர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் வெளியேற்றிய போலீசார்! சூலூரில் பரபரப்பு

சூலூர்
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சூலூர் தொகுதிக்கு உள்பட்ட ஜல்லிப்பட்டி  என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பச்சை, காவி நிறத்தில் உடை அணிந்துள்ள முருக பக்தர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முருகன் கோவிலுக்கு மாலை போட்டிருப்பதால் பச்சை, காவி வேட்டி கட்டி ஒருசில முருக பக்தர்கள் வாக்களிக்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுத்து வாக்குச்சாவடிகளுக்கு வெளியே போலீசார் தள்ளிவிட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முருக பக்தர்களை வாக்களிக்க அனுமதிக்காததன் காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. வேறு உடை அணிந்து வந்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மட்டும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  சற்றுமுன் உத்தரபிரதேச முதல் யோகி ஆதித்யநாத் காவி உடையணிந்து வாக்களித்த நிலையில் சூலூரில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என முருகபக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பாஜக ஆட்சிக்கு ஆதரவு வாபஸ்! மணிப்பூரில் ஆட்சி கவிழுமா?