வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (11:59 IST)

இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்! – புதிய கல்வி கொள்கைக்கு கனிமொழி எதிர்ப்பு!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் இருப்பதாக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைகளின் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் திட்டங்கல் குறித்து நேற்று மத்திய அரசு விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதை தொடர்ந்து மக்கள் மற்றும் கல்வியியல் நிபுணர்கள் அதுகுறித்து விவாதித்து வருகின்றனர். வைரமுத்து, குஷ்பு மற்றும் பலர் இது கல்வி முன்னேற்றத்திற்கு சாதகமான அம்சம் என கருத்துகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.பி கனிமொழி “34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா ?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் “புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றை திட்டமிட்டு செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.” என கூறியுள்ளார்.