1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:48 IST)

இது முதல் அலைதான்; இரண்டாவது அலைக்கும் வாய்ப்புள்ளது! – மருத்துவக்குழு எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இது முதல் அலைதான், மீண்டும் இரண்டாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் இன்று மருத்துவ நிபுணர்கள் குழுவோடு கலந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் தமிழக நிலவரம் குறித்து மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.

அதில் “கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று பிறகு குறையும் என தெரிவித்திருந்தோம். அதன்படியே தற்போது நடந்து வருகிறது. தற்போது உச்சமடைந்துள்ள பாதிப்புகள் மூன்று மாதங்களில் குறைந்துவிடும்” என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு பிறகு இரண்டாவது அலையாக பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.