1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 4 மே 2020 (21:49 IST)

7ஆம் தேதி முதல் மதுபானக்கடை திறப்பு….பேரதிர்ச்சி தருகிறது - சீமான்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் எல்லையில் உள்ள பொதுமக்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதில் சிரமம் இருப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 
தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில்‌ மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனால்‌ தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும்‌ கர்நாடகா மாநிலங்களில்‌ உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில்‌ உள்ள மக்கள்‌ அதிக அளவில்‌ செல்வதால்‌, மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்‌ நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில்‌ பெரும்‌ சிரமம்‌ ஏற்படுகிறது. இவற்றை கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாட்டிலும்‌ மதுபானக்கடைகளை வரும்‌ 7.5.2020 முதல்‌ திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும்‌ நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள்‌ திறக்கப்படமாட்டாது. 
 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

 
வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

 
தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது.

 
அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக்கடைகளைத் திறக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.