1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:11 IST)

புதிய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன்: கையெழுத்து போட்டு கொடுத்த மானாமதுரை எம்.எல்.ஏ

ஏற்கனவே லேப்டாப் வழங்க வேண்டிய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல், புதிய மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன் என மானாமதுரை எம்.எல்.ஏ, மாணவர்களுக்கு எழுதி கொடுத்துள்ளார்.
 
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திட்டம் அவருடைய மறைவிற்கு பின்னரும் தொடர்ந்து வருகிறது
 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை என ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மானாமதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2018- 2019, 2019-2020 ஆகிய இரண்டு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த விழாவிற்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2017-2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப்புகள் கொடுத்த பின்னர் 2018- 2019, 2019-2020ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது
 
பழைய மாணவர்களின் போராட்டம் காரணமாக வேறு வழியின்றி மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் 2018-19, 2019-20ஆம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கமாட்டேன் என வெள்ளை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு போராட்டம் செய்த மாணவர்களிடம் கொடுத்தார். இதனையடுத்தே மாணவர்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.