1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (12:46 IST)

கவலையின்றி ஊர் சுற்றும் மக்கள்... தண்டனைகள் கடுமைக்கப்பட வேண்டுமா?

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,64,357பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு ஆகியுள்ளது. 
 
மேலும், வெளியே சுற்றியதால் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ.61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நாளுக்கு நாள் இதே நிலை நீடிக்கும் நிலையில் காவல்துறையினர் தண்டைகளையும் கட்டுப்பாடுகளையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.