நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் அரசியல் களங்கள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகளை பல கட்சிகளும் துவங்கிவிட்டன. ஒரு பக்கம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுக அரசு மூன்று முக்கிய திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது.
ஏற்கனவே திமுக சார்பில் தமிழ் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என சில திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று முக்கிய திட்டங்களை விரைவில் தமிழக அரசு துவங்கவிருக்கிறது. அதில் முதலாவதாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்பை கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக டெண்டர் விடப்பட்டு இருபது லட்சம் லேப்டாப்புகளும் தயாராகி விட்டது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மாதம் தொங்கி வைப்பார் என்கிறார்கள். வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அடுத்து மகளிர் உரிமை தொகையை திட்டத்தில் பல பெண்களால் சேர முடியவில்லை. எனவே புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்கிறார்கள்.
அடுத்து வருகிற 2026 பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புடன்; ரொக்க தொகையும் கொடுக்க திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் அது எவ்வளவு தொகை என்பது இப்போது வரை தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. திமுகவை பொறுத்தவரை கடந்த 4 வருடங்களாக பொங்கலுக்கு சிறப்பு தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. அதேநேரம் தேர்தல் வருவதால் வாக்குகளை பெறுவதற்காக 2026 ஜனவரிக்கு ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்போடு ரொக்க தொகையும் கொடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.