1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (19:18 IST)

மொழிப்போரில் திமுக என்றும் தோற்றதில்லை -உதயநிதி எம்.எல்.ஏ

சி.ஏ.பி.எஃப்(CAPF) எனப்படும் ஆயுதப்படையில் ஆட்களைச் சேகரிப்பதற்கான தேர்வு தமிழ் உள்பட 15  மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, எம்.எல்.ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’மொழி உரிமை - மாநில உரிமை - சமூகநீதி - சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்திட கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் வெற்றிகளும் இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத கல்வெட்டுகளாய் அமைகிறது!

தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் இந்தி பேசாத பிறமாநில இளைஞர்களின் சார்பில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கழக இளைஞர் அணி-மாணவர் அணி தனது நெஞ்சம் நிறைந்த நன்றி!

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) பணியிடத்திற்கான கணினித் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என்று அறிவித்ததை மாற்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளில் தேர்வினை நடத்த வேண்டுமென்று கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 09.04.2023 அன்று மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எப். தேர்வு நடத்தப்படவேண்டுமென்று கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியதை ஏற்றது ஒன்றிய உள்துறை அமைச்சகம்!

மேலும், மொழிப்போரில் கழகம் என்றும் தோற்றதில்லை, மற்றுமொரு வரலாற்று வெற்றியாக #CRPF தேர்வு 13மாநில மொழியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம். குரல் கொடுத்து உரிமை காத்த மாண்புமிகு முதலமைச்சருக்கு கழக இளைஞரணி, மாணவரணி  சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.