1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran Will Announce About New Party Tomorrow

நாளை வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு: தினகரன் தனிக்கட்சி தொடக்கம்?

தினகரன்
ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாகவும், நாளை முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர்.
 
ஆனாலும் தினகரன் தனன்னுடைய ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர்கள் மூலமாக ஆளும் தரப்புக்கு நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். இதனையடுத்து தினகரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் தினகரன் இதனை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி, அதாவது நாளை தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்தும், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
 
மேலும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்களுடன் தான் உள்ளதாகவும், நாளை அறிவிக்க இருக்கும் அந்த முக்கிய முடிவு குறித்து அவர் சசிகலாவிடம் விவாதித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்: செம கலாய்!