1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:37 IST)

குடும்பத்துடன் விஷம் குடித்து வீடியோ போட்ட ஜோசியர்! – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

சமீபத்தில் பண மோசடி புகாரில் சிக்கிய இந்து மக்கள் கட்சி பிரமுகர், ஜோதிடர் பிரசன்னா குடும்பத்தோடு விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா. இவர் அப்பகுதியில் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வருகிறார். பிரசன்னா இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் நில பிரச்சினைக்காக பூஜை செய்வதற்காக பிரசன்னாவை தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து பிரசன்னா பல்வேறு பூஜைகள் செய்ய வேண்டும் என சொல்லி அடிக்கடி பணம் பெற்று சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்ததாக கருப்பையா புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பிரசன்னா மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இதனால் விரக்தியடைந்த பிரசன்னா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று வீடியோ வெளியிட்டதுடன், அதிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதையும் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரசன்னாவின் மனைவி, தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் விஷம் குடித்த நிலையில் பிரசன்னாவின் தாயார் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.