1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin says about science to students

அறிவியல் சிந்தனையும், அறநெறியும்தான் மாணவர்களுக்கு அவசியம்! - ஆன்மீக நிகழ்ச்சி சர்ச்சையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு!

Stalin
அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவியல் வழியில் முன்னேற்றத்திற்கான வழியை என்று பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய  வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!

Edited by Siva

 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. இப்போ எடுக்க போற நடவடிக்கை ஒரு பாடமா இருக்கும்! - அமைச்சர் அன்பில் மகேஸ்!