வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (12:03 IST)

அன்புவை பாதுகாக்கும் அமைச்சரின் மகன் ; கடமையை செய்யுமா காவல் துறை?

நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான சினிமா ஃபைனான்சியர் அன்பு செழியன் ஆளுங்கட்சி அமைச்சர் மகனின் ஆதரவில் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 
நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரடெக்‌ஷன் நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். பட தயாரிப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் அவர்தான் மேற்கொண்டு வந்தார். சசிகுமாரை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. இதில், சசிகுமாருக்கு பல கோடி நஷ்டம் எனக் கூறப்படுகிறது. அப்படத்திற்கும் அன்பு செழியனிடமே கடன் வாங்கியிருந்தார் சசிகுமார். 
 
சசிகுமார் நடிப்பில் அதன் பின் வெளிவந்த சில படங்களும் பெரிய வெற்றி பெறாததால் அன்பு செழியனிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்திற்கு வட்டி மேல் வட்டி எகிறியதாக கூறப்படுகிறது. ரூ.18 கோடி கடனுக்கு ரூ.18 கோடி வட்டியாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அசல் மற்றும் மேலும் வட்டி என பல கோடிகளை கொடுக்க சொல்லி நிர்பந்த்தம் கொடுத்த அன்பு செழியன், அப்பணத்தை வசூலிக்க தனது வழக்கமான கொடூர முகத்தை காட்டத் தொடங்கினார்.
 
சசிகுமார் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள் பற்றியெல்லாம் அன்பு செழியன் பேச, கடந்த 6 மாத காலமாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அசோக் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
பல வருடங்களுக்கு முன்பு மௌனராகம், தளபதி ஆகிய படங்களை தயாரித்த ஜூ.வி தற்கொலை செய்து கொண்டதற்கும் அன்பு செழியன் பெயரே அடிபட்டது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில், அவர் அன்புசெழியனிடம் பணம் வாங்கியதாலேயே தான் தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்போது திறைத்துனர் அன்பு செழியனுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
 
நேரடி அரசியலில் அன்பு செழியன் இல்லை என்றாலும், ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலருடன் அவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனது பணபலம் மூலம் அமைச்சர்களிடம் நெருங்கிவிடுவதை பழக்கமாக கொண்டிருப்பவர் அன்பு செழியன்.
 
எனவே, பல அமைச்சர்கள் தங்கள் கருப்பு பணத்தை அன்பு செழியனிடம் கொடுத்து, கந்து வட்டிக்கு விட்டு, அதை வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளது. அதிகாரவர்க்கம் தனக்கு ஆதரவாக இருப்பதால், எந்த பெரிய தயாரிப்பாளரையும் மிரட்டி வழிக்கு கொண்டு வந்துவிடுவார் அன்பு.  இவரிடம் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை எனக் கூறப்படுகிறது.


 

 
இந்நிலையில், பணிவிற்கு பெயர் போன அமைச்சரின் மகனுடன் அன்புவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடிக்கணக்கான பணத்தை அமைச்சர் மகன் கொடுக்க, அன்புசெழியன்.அதை கந்து வட்டிக்கு விட்டு, பல கோடி வெள்ளைப்பணமாக மாற்றிக் கொடுத்து வந்துள்ளார் என செய்திகள் உலா வருகிறது
 
தற்போது அசோக்குமார் தற்கொலை வழக்கில் போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, அமைச்சர் மகனிடம் அன்பு செழியன் உதவி கோர, ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும், விரைவில் அவரின் நபர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 
அரசியல் பின்புலம் வலுவாக இருப்பதால், அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் எனவும், விரைவில் இந்த வழக்கில் இருந்து அவர் வெளியேறி, தன் அதிகாரப்போக்கை மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் தொடர்வார் எனவும் நம்பப்படுகிறது. 
 
ஏனெனில், அவர் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அவர் தேவைப்படும் நபராக இருக்கிறார்.

கடமையை செய்யுமா காவல்துறை?...