1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:47 IST)

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து?? – பாதுகாப்பு கேட்டு மனு!

அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் ஆதரவை திரட்டுவதற்காக சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தனக்கு அதிகம் செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்குள் தற்போது எடப்பாடி பழனிசாமி மாவட்டம்தோறும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஆகஸ்டு 15ம் தேதிக்கு பிறகு அவர் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் “முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு அவர் பயணம் செய்ய உள்ள நிலையில் அங்குள்ள கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாலும், சமூக விரோதிகளாலும் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு அதிகமான பாதுகாப்பை வழங்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.