AI உதவியுடன் தன்னை தானே கடத்தி கொண்ட சிறுவன்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் ஆன்லைன் கேமிங் மோகம் காரணமாக ஒரு சிறுவன் தன்னை தானே கடத்தி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்ரிகஞ்ச் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து சிறுவனின் தொலைபேசியிலிருந்து அவனது தந்தைக்கு வந்த குறுஞ்செய்தியில், ஒரு லட்சம் ரூபாய் மிரட்டல் பணம் கேட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் அனுப்பப்பட்டன.
வழக்கைப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் கோப்பகங்களின் உதவியுடன் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் சிறுவனை பத்திரமாக மீட்டனர். விசாரணையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான அந்த சிறுவன் பணம் பெறுவதற்காகவே இந்த திட்டத்தை தீட்டியது தெரியவந்தது. டெல்லியில் வசிக்கும் தனது பெண் நண்பரின் உதவியுடன் AI படங்கள் மூலம் தன்னை யாரோ கடத்தியது போல் போலியாக ஜோடித்து தந்தையிடம் பணம் பறிக்க முயன்றது அம்பலமானது.
போலீசாரின் அதிநவீன தொழில்நுட்பப் புலனாய்வால் இரண்டு மணி நேரத்திற்குள் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததுடன், சிறுவன் மீட்கப்பட்டு அவனது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டான். ஆன்லைன் கேமிங் மற்றும் அவசர பணத்தேவைக்காக சிறுவர்கள் இதுபோன்று விபரீதமான செயல்களில் ஈடுபடுவது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
