இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலம் குவாஹாட்டி வரை இந்த அதிநவீன ரயில் தனது பயணத்தை தொடங்குகிறது.
சுமார் 966 கி.மீ தொலைவு கொண்ட இந்த பயணத்திற்கு, விமான கட்டணத்தை விட குறைவான விலையிலேயே டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3-அடுக்கு ஏசி: ரூ.2,300 (உணவு உட்பட)
2-அடுக்கு ஏசி: ரூ.3,000
முதல் வகுப்பு ஏசி: ரூ.3,600
தற்போது இவ்விரு நகரங்களுக்கு இடையே விமானக் கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை வசூலிக்கப்படும் நிலையில், நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, இதில் ஒரே நேரத்தில் 823 பயணிகள் பயணிக்க முடியும். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தற்சமயம் பாதுகாப்பு மற்றும் தண்டவாள கட்டமைப்பிற்கு ஏற்ப 120 முதல் 130 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 12 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நீண்டதூரப் பயணம் இனி வரும் காலங்களில் மிகவும் வசதியாகவும் வேகமாகவும் அமையும்.
Edited by Siva