AI அறிவு இருந்தால் மட்டுமே வேலை.. ரூல்ஸை மாத்திய HCLTech.. லட்சக்கணக்கில் சம்பளம்...
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCLTech, தனது பணியாளர் சேர்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இனி அதிக எண்ணிக்கையிலான பொதுவான பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற மிக சிறந்த பொறியாளர்களை மட்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் பொறியாளர்கள் 'Forward Deployed Engineers' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் வாடிக்கையாளர்களின் வணிக சிக்கல்களை AI தொழில்நுட்பம் மூலம் நேரடியாக தீர்க்கும் பணியை செய்வார்கள். இவர்களுக்கான ஊதியம் சாதாரண ஆரம்பநிலை ஊழியர்களை விட நான்கு மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி ராம் சுந்தரராஜன் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் ஐடி துறையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான தகுதிகளை முழுமையாக மாற்றியுள்ளது. இனி வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது; AI, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு பொறியியல் போன்ற துறைகளில் ஆழ்ந்த அறிவும், வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பணியாற்றும் திறனும் அவசியம்.
மேலும், இந்நிறுவனம் தனது தரவு மையங்களை விரிவாக்க 365 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் 4,624 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் நிறுவனம் வலுவான நிலையில் உள்ளது. தொழில்நுட்ப உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், புதிய தலைமுறை பொறியாளர்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்வது அவசியமாகிறது.
Edited by Siva
