வட இந்தியாவில் மீண்டும் வெளுக்க போகும் மழை.. 18 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் மீண்டும் ஒரு புதிய மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வட மாநிலங்களில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், இன்று முதல் வட இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட மொத்தம் 18 மாநிலங்களுக்கு மழை, இடி மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வீசிய வறண்ட காற்றினால், பருவமழை மேகங்கள் சமவெளிப் பகுதிகளில் இருந்து இமயமலைப் பகுதியை நோக்கி நகர்ந்ததே, கடந்த சில நாட்களாகச் சமவெளிப் பகுதிகளில் மழை குறைந்ததற்குக் காரணமாக அமைந்தது. தற்போது நிலைமை மாறி மீண்டும் மழைப்பொழிவு சீராகத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், பகல் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள நீரைக் கடப்பதைத் தவிர்க்குமாறும், மலைப்பிரதேசங்களில் பயணம் செய்யும்போது நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்பப் பயணங்களைத் திட்டமிடுமாறு பொதுமக்களுக்குக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Edited by Siva
