நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
பிரபல தமிழ் சினிமா நடிகர் விமல் நடித்து வெளியான 'மன்னர் வகையறா' திரைப்படத்தை தயாரிப்பதற்காக, பைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ. 4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். படம் வெளியான பிறகும் அந்த தொகையை அவர் திருப்பி செலுத்தாத நிலையில், பின்னர் அந்த தொகைக்காக விமல் வழங்கிய காசோலை வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் கோபி சென்னை 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆரத்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், காசோலை தொகையைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் விமல் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
