வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (17:28 IST)

கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு காயம்: போட்டிகளில் தொடர்வாரா என்று சந்தேகம்

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் விளையாடிய போது, கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு காலில் சதை பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்து வரவிருக்கும் இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்திருந்தார்.

தற்போது கிரிக்கெட் வீரர் விஜய ஷங்கர், வலைப்பயிற்சியில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது பும்ரா பந்து வீசியதில், கால் கட்டை விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காயம் காரணமாக ஷிகர் தவான் மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது விஜய ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதில், விஜய ஷங்கரும் போட்டிகளிலிருந்து விலகிவிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த செய்தியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், மிகவும் கவலையோடு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.