1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (14:43 IST)

கபில் தேவ் காலத்து பகை – பழிதீர்க்க காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சிறப்பு கட்டுரை

மாரி திரைப்படத்தில் வருவது போல “அப்ப அவன் வெறும் புறா வளக்குற பையன்தான்.. இப்போ வேற லெவல் ஆயிட்டான். இப்போ நாமல்லாம் அவனை நெருங்க கூட முடியாது” என்ற வசனம் இந்திய அணிக்கு இன்று கனகச்சிதமாக பொருந்த போகிறது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களை நாம் விருவிருப்போடு பார்த்திருப்போம். ஆனால் இரண்டு நாட்டு வீரர்களும் தோழமையுடனே அந்த போட்டியை எதிர் கொள்வார்கள். அதனால்தான் கோலியை பார்த்து பயிற்சி பெறுகிறேன் என சர்ப்ராஸ் அஹமதுவால் சொல்ல முடிந்தது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் இவ்வளவு பிரபலமாவதற்கு முன்னால் ஒரு டான் இருந்தான் உலக கோப்பை போட்டிகள் தொடங்கியதிலிருந்து அவனை யாரும் வெல்ல முடியவில்லை. தொடர்ந்து இரண்டு உலக கோப்பைகளிலும் அவன்தான் சாம்பியன். இது வேறு யாருமல்ல இன்று விளையாட போகும் வெஸ்ட் இண்டீஸ்தான்.

1975ல் நடைபெற்ற முதல் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் ஆனது. 1979ல் இங்கிலாந்தை தோற்கடித்து சாம்பியன் ஆனது. அன்றைய கிரிக்கெட் தர வரிசையில் முதலில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ். இரண்டு உலக கோப்பைகளில் நடந்த மொத்த ஆட்டங்களில் ஒரே ஒரு தடவை மட்டும் வென்று கடைசி இடத்தில் இருந்தது இந்தியா. இந்தியாவுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை சமாளிப்பதே சவாலான விஷயம். அப்போதுதான் 1983ம் ஆண்டு மூன்றாம் உலக கோப்பை போட்டிகள் தொடங்கியது. இந்திய வீரர்கள் எல்லாரும் தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தோடே இலண்டனுக்கு கிளம்பினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் நாம் வெற்றிபெறுவோம் என உறுதியாக நம்பினார். ஆனால் அவரது வார்த்தைகளை யாரும் நம்பவில்லை.

இருந்தாலும் முடிந்தளவு முயற்சி செய்து பார்க்கலாம் என களம் இறங்கியவர்களுக்கு அதிர்ச்சி. முதல் ஆட்டமே டான் வெஸ்ட் இண்டீஸுடன்தான். ஆனால் அந்த ஒருவர் கூறினார் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தலாம் என்று. அன்றைய ஆட்டத்தில் அவர் சொன்னப்படியே வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிடம் வீழ்ந்தது. எல்லாரும் அந்த வீரரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அவர்தான் அன்றைய இந்தியாவின் கேப்டன் கபில்தேவ்.

அடுத்த ஆட்டம் ஸிம்பாப்வேவுடன் நடந்தது. அதிலும் இந்தியா வெற்றி. இந்தியர்களாலும், இந்திய அணியினாலும் இதை நம்பவே முடியவில்லை. சந்தோச கூத்தாடினர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அடுத்த இரண்டு மேட்ச்சுகளில் தொடர்ந்து தோல்வியடைந்தது இந்தியா.

இந்திய வீரர்கள் நம்பிக்கையிழந்தனர். ஏதோ அதிர்ஷ்டவசமாக இரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்றோம் என்று நினைத்தனர். ஆனால் கபில் தேவ் சொன்னார் “அதிர்ஷ்டத்தால் அல்ல நல்ல ஆட்டத்தினாலேயே நாம் வெற்றி பெற்றோம்” என்று.

அடுத்ததாக மீண்டும் ஸிம்பாப்வே-க்கு எதிரான ஆட்டத்தை இந்தியா எதிர்கொண்டது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்ற துவக்க ஆட்டக்காரர்களே ஒரு ரன் கூட எடுக்காமால் விக்கெட் இழந்தனர். இந்திய அணியினர் முடிவே செய்து விட்டனர். இந்த உலக கோப்பை அவ்வளவுதான் என்று. ஆட்டநாயகானான யாஷ்பல் சர்மாவால் கூட 9 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. ஸிம்பாப்வேயின் மின்னல் வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இந்தியா.

அப்போதுதான் வரலாற்றை எழுத மைதானத்துக்குள் மட்டையுடன் இறங்கினார் அந்த கிரிக்கெட் நாயகன். 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் 138 பந்துகளில் 175 ரன்கள். ஒற்றை ஆளாய் கிரிக்கெட் மைதானத்தையே சிதறடித்தார் கபில் தேவ். கடைசி வரை தோற்காமல் நின்று விளையாடினார் கபில்தேவ். அந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் கபில்தேவ். ஸிம்பாப்வே இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

அதற்கு பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவெல்லாம் இந்தியாவுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. முதலில் எந்த வெஸ்ட் இண்டீசிடம் தோற்றதோ அதே வெஸ்ட் இண்டீஸுடன் இறுதி சுற்றில் வந்து நின்றது இந்தியா.

இந்திய வீரர்களுக்கு ஒரு அசுரனை வெல்ல வேண்டிய நிர்பந்தம். முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டாலும் வெஸ்ட் இண்டீஸின் ரன் ரேட்டை ஒப்பிட்டால் இந்தியா சுமார்தான். இருந்தாலும் இந்தியா எதிர்கொண்டது 54 ஓவர்களே முடிந்திருந்த நிலையில் 183 ரன்கள் பெற்று ஆட்டமிழந்தது இந்தியா. வெஸ்ட் இண்டீசுக்கு 184 ரன்கள் என்பதெல்லாம் பெரிய இலக்கே கிடையாது என்றே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர்.

நம்மால் அடிக்கமுடியவில்லை என்றால் அவர்களும் அடிக்கக்கூடாது என்று பந்துவீச தொடங்கியது இந்தியா. இந்தியாவின் அதிவேக பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். 52 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்தது இந்தியா. வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்து சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் சின்ன பையன் இந்தியாவிடம் மண்டியிட்டது.

லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெற்ற இந்த புகழ்பெற்ற சம்பவம் வரலாற்றில் எழுதப்பட்டது. இந்தியாவெங்கும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கேப்டன் கபில்தேவ் உலக கோப்பையை பெற்று கொண்ட அந்த புகைப்படம் பல இளைஞர்களின் வீட்டில் ஒட்டியிருந்தது. கபில்தேவ் சாதனை நாயகனாக மாறினார்.

அன்று இந்தியாவிடம் வாங்கிய அடி இன்னும் வெஸ்ட் இண்டீஸ் மீளவே இல்லை. அதற்கு பிறகு இதுவரை ஒருதடவை கூட உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸால் வெல்ல முடியவில்லை. அன்று கபில்தேவ் காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா மோதலின் எச்சங்கள் இன்னும் விளையாட்டு வீரர்களிடையே இருக்கிறது.

இப்படிப்பட்ட வரலாற்று மோதலை கொண்ட இரண்டு அணிகள்தான் இன்று மோத இருக்கின்றன. மீண்டும் அரக்கனாக எழுமா வெஸ்ட் இண்டீஸ்? அல்லது நான் தான் எப்பவுமே டான் என காட்டப்போகிறதா இந்தியா? பொறுத்திருந்து பார்ப்போம்.