1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shreyas iyer talked about hat trick victories

மூன்று வெற்றிகளைப் பெற்றுவிட்டதால் அலப்பறை பண்ணக் கூடாது- கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ்!

IPL 2024
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்தது. இந்த இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்துள்ளது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணியின் சிக்ஸர் நாயகன் ஆண்ட்ரே ரஸல் 19 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் எட்டே பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.  இதையடுத்து 273 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது கே கே ஆர் அணி.

இதுகுறித்து பேசியுள்ள அவ்வணி கேப்டன் ஸ்ரேயாஸ் “மூன்று வெற்றிகளை தொடர்ந்து பெற்றுள்ளதால் நாங்கள் மிதப்பாக இருக்கக் கூடாது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் டெல்லிக்கு எதிராக 273 ரன்கள் சேர்ப்போம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth