இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கான், தற்போது சிறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளிவரும் செய்திகள் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல் உட்பட 14 சர்வதேச முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிற்கு ஒரு கூட்டு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.
அரசியலை கடந்து, ஒரு விளையாட்டு வீரராகவும் மனிதநேய அடிப்படையிலும் இம்ரான்கானுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும், கண்ணியமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சிறையில் அவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் கவலையளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "மைதானத்தில் நிலவும் போட்டி மனப்பான்மை ஸ்டம்புகள் பிடுங்கப்பட்டதும் முடிந்துவிடும், ஆனால் மரியாதை என்றும் நிலைக்கும்" என்று அந்த அறிக்கையில் அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
Edited by Siva