அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து அவர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் பங்களாதேஷை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த போட்டியில் ஷமி ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். உலகிலேயே அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது பவுலர் ஷமிதான் என்பது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில் போட்டியில் ஐந்து விக்கெட்களை எடுத்தபோது ஷமி வானை நோக்கி பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தார். அது குறித்து பின்னர் பேசும்போது “அந்த முத்தம் என்னுடைய அப்பாவுக்கு. அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் எப்போதும் என் கூடவே இருக்கிறார்.” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.