1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (07:41 IST)

டி 20 உலகக் கோப்பை தொடருக்கு கேப்டனாக செயல்பட அவர்தான் சரியான ஆள்- கங்குலி கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடந்த 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அவர் சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவே இல்லை. அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா இந்திய டி 20 அணியை வழிநடத்தினார்.

இதனால் இனிமேல் ரோஹித் ஷர்மா டி 20 அணிக்கு திரும்ப முடியாது என்றே கருதப்பட்டது. இதற்கிடையில் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அந்த தொடருக்கு ரோஹித் ஷர்மாதான் தலைமை தாங்குவார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ளார் பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி. அதில் “டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்க ரோஹித் ஷர்மாதான் சரியான ஆள். நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றது அவரின் தலைமைப் பண்பை காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.