1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (21:06 IST)

பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு எச்சரிக்கை மணி-- முதல்வர் மு.க.ஸ்டாலின்

stalin
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு சட்டவிரோதம் எனக் கூறி தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு எச்சரிக்கை மணியையும் இந்தத் தீர்ப்பு அடித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சண்டீகர்  மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது.
 
இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட 12 கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாது என்று அறிவித்து, பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்த  நிலையில்,   வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி மாற்றம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
 
இத்தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை திங்களன்று நடைபெற்றது.
 
அப்போது தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. அதில்,  உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார். அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று  முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி,   சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு சட்டவிரோதம் எனக் கூறி தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் தேர்தலில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
 
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நீதியின் கலங்கரை விளக்கம். அரிதாகப் பயன்படுத்தும் சட்டப்பிரிவு 142   ன் கீழ் நியாயத்தை நிலை நிறுத்தியது மட்டுமல்லாமல், தேர்தல் அதிகாரியின் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கியுள்ளது.
 
வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் சூழ்ச்சித் தந்திரங்களுக்கு எச்சரிக்கை மணியையும் இந்தத் தீர்ப்பு அடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.