1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:59 IST)

அடுத்த சீசனில் சிஎஸ்கே கேப்டனாக ரோஹித் சர்மா? – மைக்கெல் வாகன் விருப்பம்!

Rohit sharma
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ரோஹித் சர்மா வர வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கெல் வாகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.



2008 முதலாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் ரோஹித் சர்மா. ஆனால் இந்த சீசனில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். கேப்டன்கள் மாறுவது சகஜம்தான் என்றாலும், கேப்டன் பதவி கொடுத்தால்தான் வருவேன் என ஹர்திக் பாண்ட்யா அடம்பிடித்து வாங்கியதால் ரோஹித் ரசிகர்கள் ஹர்திக் மீது செம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் முதல் சில போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா நடந்து கொண்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது சச்சரவின்றி மும்பை அணி வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டுள்ளது. எனினும் ரோஹித்தை அவமதித்த மும்பை அணியில் அவர் இருக்கக் கூடாது என்றும் சிலர் பேசி வருகின்றனர்.


இந்நிலையில் பிரபல இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கெல் வாகன் இந்த விவகாரம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது “ரோஹித் சர்மா சென்னை அணிக்காக விளையாடுவாரா? தோனி இடத்தை நிரப்புவாரா? என கேட்கப்படுகிறது. இந்த வருடம் சென்னை அணியை ருதுராஜ் கேப்பிட்டன்சி செய்கிறார். ஆனால் அடுத்த சீசனில் ரோஹித் கேப்பிட்டன்சி செய்தால் நன்றாக இருக்கும். அவரை நான் சிஎஸ்கேவில் பார்க்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

இந்த சீசனுக்கு பிறகு ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் சர்மாவை மும்பை அணி வெளியேற்றினால் அவரை வாங்க பல அணிகளும் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K