ரொனால்டோ போல கோலி ஒரு முழுமையான வீரர்.. பாராட்டிய பாகிஸ்தான் பவுலர்!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார்.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்துள்ளார். இதையடுத்து கோலி பற்றி பலரும் பாராட்டிப் பேசி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமீரின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
அவர் “ரொனால்டோ, மெஸ்ஸியை ஏன் மக்கள் விரும்புகிறார்கள். ரொனால்டோவின் வாழ்க்கையைப் பாருங்கள். வேலையில் ஒழுக்கம் மற்றும் பிட்னெஸ் கவனம் என முழுமையான வீரர் அவர். அதே போல விராட் கோலியும் முழுமையான வீரர். பாகிஸ்தானில் கூட பலருக்குக் கோலி முன்னுதாரணமாக இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.