1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (13:01 IST)

நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய தருமபுரி இளைஞரின் சிறுவயது கனவு

(இன்று 02.02.2022 புதன்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபுவிற்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிரபுவை, அவரது தாயார் கூலி வேலை செய்து அரசுப்பள்ளியில் படிக்க வைத்தார். ஏழ்மை காரணமாகவும், 2000-ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும், இவரால் மருத்துவம் படிக்க இயலவில்லை.

இந்நிலையில் நீட்தேர்வு மூலம் மருத்துவம் படிக்க திட்டமிட்ட பிரபு, அதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு செவ்வாய்கிழமை கலந்தாய்வு நடந்தது. அதில் அவருக்கு பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதனை அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உலகப் பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் மூன்று கோயில்கள் பரிந்துரை

கர்நாடகா மாநிலத்தின் பேளூர், ஹலேபிட், சோம்நாதபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஹோய்சாள கோயில்களை 2022-2023ஆம் ஆண்டிற்கான உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற வைப்பதற்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, யுனெஸ்கோவுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி விஷால் வி சர்மா, அந்த அமைப்பின் இயக்குநர் லாசரே எளென்டெளவிடம் இந்தப் பரிந்துரையை சமர்ப்பித்துள்ளார்.

ஏப்ரல் 15, 2014 முதல் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் 'ஹோய்சாளவின் கோயில்கள்' உள்ளன. மேலும் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கு சான்றாகவும் இவை இருக்கின்றன. இந்த 3 கோயில்களை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.

"விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும்:"

நெல் கொள்முதல் செய்யும்போது முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் செவ்வாய்கிழமையன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நெல் கொள்முதல் செய்ய ஆன்-லைன் மூலமாக விவசாயிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அரசு உத்தரவிட்டது. இந்த புதிய முறை விவசாயிகளை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியது.

இணையம் வேலை செய்யாதது, ஸ்மார்ட் போன் இல்லாத விவசாயிகள், பட்டா தங்கள் பெயரில் இல்லாதவர்கள், குத்தகைவிவசாயிகள் என லட்சக்கணக்கானோர் இந்த புதிய முறையினால் அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்கு வசதிகளை கொள்முதல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்திட வேண்டும்.", என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை

மதுக்கரை-வாளையார் இடையே ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆய்வுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தினந்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மதுக்கரையில் இருந்து கேரளாவுக்கு ஏ மற்றும் பி என 2 ரயில் பாதை வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்கு கடந்த 20 ஆண்டு களில் 19 விபத்துகள் ஏற்பட்டு 26 யானைகள் உயிரிழந்து உள்ளன. இதில் 90 சதவீத விபத்துகள் இரவில்தான் நடந்து உள்ளன.

கோவை அருகே உள்ள மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக செல்லும் ரயில் தண்டவாளம் பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி காட்டு யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன.

தண்டவாளத்தின் இருபுறமும் உள்ள செடிகொடிகளை வெட்டுதல், 50 அடி அகலம் கொண்ட சாய்வு தளம் அமைத்து யானை கள் கடந்து செல்ல வழி அமைத்தல், 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைத்தல், பல்வேறு கருத்துகள் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.