1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:35 IST)

சென்னை சென்ட்ரல்: 400 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் ரயில் நிலையம் - நடக்கும் மாற்றங்கள் என்ன?

இன்று (ஏப்ரல் 1) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)

400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இடமானது, நீரூற்று, எஸ்கலேட்டர் போன்றவற்றுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பாதாசாரிகளுக்கான பகுதியில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளன.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எதிரே உள்ள இடத்தில் நீரூற்றுகள் மூலம் அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு முன்பாக வணிக பயன்பாட்டிற்காக இரட்டை கோபுரங்கள் கட்டப்படும்.

2,000 கார்கள் பயணிக்கும் வகையில் மூன்று நிலைகளில் நிலத்தடி பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மத்திய சதுக்கம் 1.54 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது," எனத் தெரிவிக்கிறது.

'எய்மஸ் கட்டுமானத்தை விரைந்து முடிக்கவேண்டும்'

தமிழ்நாட்டில் பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அதுகுறித்த செய்தியில், "மாநில அரசு, மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவ கல்லூரியாவது இருக்கவேண்டும் என முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்திக்கவுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தை விரைந்து முடிக்குமாறும் கோவையில் மற்றுமொறு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு அனுமதிக்குமாறும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கும் முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநில அரசு புதியதாக அறிமுகப்படுத்தவுள்ள மெடிக்கல் வேன்களை பார்வையிட்டார். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 40 மருத்துவ முகாம்களை நடத்தக்கூடிய 389 வேன்களை மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது.