1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (23:21 IST)

பிபிசி சேவை சர்வதேச அளவில் இந்தியாவில் அதிக நேயர்களை பெற்றுள்ளது

புதிய தரவுகளின்படி இந்தியாவில் வாரம் ஒன்றிற்கு 60 மில்லியன் மக்களை பிபிசி சென்றடைவது தெரியவந்துள்ளது.

இந்த சமீபத்திய தரவுகளின்படி உலகளவில் பிபிசி, இந்தியாவில் அதிகளவிலான நேயர்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பிபிசி சேவை ஆங்கிலம் உட்பட இந்திய மொழிகளான தமிழ், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, தெலுகு, மற்றும் வங்காள மொழியிகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது.

பிபிசியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பிபிசி டிஜிட்டல் தளத்தில் 186 சதவீத அளவிற்கு வளர்ச்சி பெற்றதாகும்.

இந்த புதிய தரவுகள்படி, சர்வதேச அளவில் வாரம் ஒன்றிற்கு 468..2 மில்லியன் மக்களை பிபிசி சென்றடைவதும் தெரியவந்துள்ளது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். இது பிபிசியின் இதுவரை இல்லாத அளவு வளர்ச்சியாகும்.

பிபிசி நியூஸ் ஹிந்தி மொழி சேவை பிபிசியின் அனைத்து உலகளாவிய மொழி சேவைகளின் டிஜிட்டல் பார்வையாளர்களிலேயே மிகப்பெரிய அதிகரிப்பை (175%) பதிவு செய்துள்ளது. அது ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 13.3 மில்லியன் மக்கள் வரை சென்றடைகிறது.

இது தற்போதைய பிபிசி நியூஸ் இந்தி சேவையின் மொத்த வாராந்திர வாசகர்கள் எண்ணிக்கையான 24.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் அதிகமாகும். இதன் மூலம், பிபிசியின் மிகவும் பிரபலமான இந்திய மொழி செய்தி சேவையாக ஹிந்தி சேவை உருவெடுத்துள்ளது.

தமிழ் மொழி சேவை டிஜிட்டல் தளத்தில் 153 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்திய மொழி சேவைகளின் ஆசிரியர் ரூபா ஜா இதுகுறித்து கூறுகையில், "தெளிவு, லட்சியம், சுவாரஸ்யமான முறையில் செய்திகளை வழங்குதல் ஆகியவற்றை கோரும் இந்த அதிக போட்டி மிகுந்த சந்தையில் பிபிசி இந்திய மொழி சேவைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியக்கிறது. இந்திய நேயர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது குறித்து நாங்கள் பெருமையடைகிறோம். இதுவே எங்கள் வளர்ச்சியை அடுத்தடுத்த இரு வருடங்களில் அதிகரித்துள்ளது. போலிச் செய்திகள் அதிகரித்துள்ள இந்த சூழலில், நேயர்கள் பிபிசியின் நம்பகமான மற்றும் பக்கச்சார்பற்ற செய்திகள் மீதான நம்பிக்கையை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.

பிபிசி உலக செய்தி பிரிவின் கீழ் செயல்படும் ஆங்கில மொழி தொலைக்காட்சியான பிபிசி வேர்ல்ட் நியூஸ் மற்றும் பிபிசி.காம் ஆகியவற்றிற்கான இந்திய நேயர்களும் அதிகரித்துள்ளனர். இந்த சேவைகள் வாரம் ஒன்றிற்கு 11.1 மில்லியன் மக்களை சென்றடைகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் குறித்து பேசிய பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டோனி ஹால், "எதிர்வரும் தசாப்தத்தில் பிரிட்டன் உலகத்துடன் ஒரு புதிய உறவை உருவாக்கும். இது 'குளோபல் பிரிட்டன்' என்னும் லட்சிய பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெற உலகளவில் நமக்கு உள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். அதாவது பிபிசியின் சர்வதேச அளவிலான முழு திறனைவெளிப்படுத்துவது.இன்று பிரிட்டனின் வலுவான மற்றும் நன்கு அறியப்பட்ட தர அடையாளமாக பிபிசி உள்ளது. இது உலகளவில் தரம் மற்றும் நியாயத்திற்கு ஒத்ததாகும்" என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட்-19 வைரஸ் பரவ தொடங்கியதும், பல நம்பகமான செய்திகளுக்கான தேவை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சர்வதேச ஊடகங்களில் அதிகப்படியாக, 42 மொழி சேவைகளின் ஊடாக 310 மில்லியன் மக்களை பிபிசி சென்றடைந்தது.

பிபிசியின் செய்திகள் சர்வதேச தளங்களான யூ ட்யூபில் 129 சதவீத அளவு வளர்ச்சியடைந்துள்ளது. பேஸ்புக்கில் 31 சதவீத அளவு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் டிவிட்டரின் வார வளர்ச்சி இருமடங்காக அதிகரித்து 6 மில்லியனாகவும், இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.

பிபிசியின் இந்த வளர்ச்சியில் டிஜிட்டல் சேவை முக்கிய பங்காற்றுகிறது. டிஜிட்டல் சேவை 53 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த அண்டிற்கான சர்வதேச நேயர்கள் கணக்கீடுபடி 151 மில்லியன் பேர் பிபிசி டிஜிட்டல் சேவையை பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது.