1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 மே 2021 (23:44 IST)

சீமான் உறுதி: 2026-இல் தனித்தே போட்டி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காணொளியில் பேசியது என்ன?

2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், 2026இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் போன்றவற்றிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காணும் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
 
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் 12ஆம் ஆண்டு நிகழ்வு மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை தமிழர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வரும் தலைவர்களில் ஒருவரான சீமான், தமது ட்விட்டர் பக்கத்தில் நினைவேந்தல் காணொளியை வெளியிட்டார்.
 
36 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியின் கடைசி சில நிமிடங்களில் அவர் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விவகாரங்களை விவரித்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.
 
நாம் தமிழர் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டோம்
எந்த நோக்கத்தை கொண்டிருக்கிறாயோ அதற்காக உறுதியாக இரு என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். யாருக்கோ உழைக்கிறாய் என்ற எண்ணத்தை கைவிடு. என் அன்பிற்குரியவர்கள், நண்பர்கள், உலகம் முழுவதும் உள்ள தாய் தமிழ் உறவுகள், என்னுடன் துணையாக இருங்கள்.
 
எந்த காலத்திலும் தமிழகத்துக்காகவும் தாய் மண்ணுக்காகவும் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை பிரபாகரன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். எதற்காகவும் பதவிக்காகவும் அற்ப பணத்துக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
 
2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். 2026 தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். அதில் எந்த சமரசமும் எங்களுக்கு கிடையாது. அப்படி சமரசம் செய்து வரும் வெற்றி தேவையில்லை.
 
கடலைத் தாண்டி விட்டோம். கரை வந்துதான் தீரும். உள்ளாட்சி தேர்தல் வருகிறது. தயாராவோம். கொரோனா தொற்று முடியும் கட்டத்தில் இருக்கிறது. நமது உறவுகளில் பலரை இழந்து விட்டோம். சாகுல் ஹமீது, காந்திராசு உள்பட பலரை இழந்து விட்டோம். எனவே, நமது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பை கடைப்பிடித்து மிகவும் கவனமாக இருங்கள்.
 
உள்ளாட்சி தேர்தலில் உறுதியாக நாம் போட்டியிடுவோம். அதைத்தொடர்ந்து 2024ஐ நோக்கி நகருவோம். பிறகு 2026ஆம் ஆண்டை நோக்கிச் செல்வோம். ஐந்து ஆண்டுகாலம் உள்ளது. இந்த ஐந்து ஆண்டு காலமும் நாம் விளையாடுவோம்.
நாம் மூன்றாவது பெரிய கட்சி என சிலரை போல நாமே அறிவித்துக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம்தான் கூறியிருக்கிறது. கோட்பாடு அளவில், கொள்கை அளவில் சமரசமின்றி நாம் போட்டியிடுகிறோம். என்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்போம். உறுதியாக நாம் வெல்வோம். இனி வரும் காலங்களில் நம்மை நாமே செதுக்கிக் கொண்டு செயல்படுவோம்.
 
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதை ஏற்க சர்வதேச சமூகம், இந்திய நாடு ஏற்க மறுக்கிறது. போர்க்குற்றம் என்ற அளவிலேயே அவை நின்கின்றன. படுகொலை செய்த இனத்துடன் படுகொலை செய்யப்பட்ட இனம் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்ற கருத்துருவாக்கம் வர வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
 
ஆனால், அதை உலக நாடுகள் விரும்பவில்லை. குறிப்பாக, இந்தியா துணை கண்டம் பெரிய நாடு அதை விரும்பவில்லை. ஆனால், நாங்கள் எங்கள் தாய்மண்ணான தமிழ்நாட்டில் எங்களுக்கான அரசை நிறுவிய பிறகு இந்தியா எங்களுக்காகப் பேசாமல் தப்பிக்க முடியாது. இந்தியா என்பது மத்தியில் ஆளும் பிரதமர் அல்ல. பல மாநிலங்களின் ஒன்றியம்.
 
ஆனால், நாங்கள் எங்களுக்கு அதிகாரம் வரும்போது, மேற்கு வங்கம் பேசும், பிகார் பேசும், குஜராத் பேசும், கர்நாடகம், ஆந்திரம், கேரளா என எல்லோரும் பேசுவார்கள். பேசி இனங்களை ஒருங்கிணைப்போம். பஞ்சாபை பேச வைத்து விட்டோம். திரிபுராவை, மணிப்பூரை பேச வைப்போம். எல்லா இனங்களையும் எங்களுக்காக பேச வைத்து இந்திய குரலாக எமக்கான குரலாக ஒலிப்போம். அப்போது சர்வதேச சமூகம் எங்களுடைய குரலை திரும்பிப் பார்க்க வைப்போம் என்று சீமான் பேசியுள்ளார்.